ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் தொடர் மரணம்
வனத்துறையினர் அதிர்ச்சி
வால்பாறை அக்-23
வால்பாறை பகுதியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் காட்டெருமை ஒன்று மரணம் அடைந்துள்ளது வனத்துறையினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 958 சதுர கிஇமீட்டர் பரப்பளவில் ஆனைமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இங்கு வன விலங்குகளின் எண்ணிக்கையை அதிகப் படுத்திட தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனலி தேயிலை தோட்டத்தில் புலி ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு ஹைபாரஸ்ட் தேயிலை தோட்ட பகுதியில் ஒரு சிறுத்தைப்புலி இறந்து கிடந்தது. சென்ற வாரம் தமிழ்நாடு தேயிலை தோட்டகழக தேயிலை தோட்டத்தில் காட்டெருமை ஒன்று சேற்றில் சிக்கி இறந்தது. இந்நிலையில் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள கிணற்றில் காட்டெருமை ஒன்று விழுந்து தப்பிக்க போராடியது.
தகவலறிந்த மானாம்பள்ளி வனச்சரகர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்திரவின் பேரில் வனவர் சின்னசாமி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு துறையினர் உதவியுடன் காட்டெருமையை உயிருடன் மீட்க நடவடிக்கை மேற்கொன்டார். பல மணி நேர போராட்டத்திற்கு பின் இந்நடவடிக்கை பலனின்றி காட்டெருமை இறந்தது. இதுபற்றி கருத்து கூறிய வனவர் சின்னசாமி இறந்த ஆண் காட்டெருமைக்கு சுமார் 7 வயது இருக்கும் காட்டெருமைகளுக்கிடையே ஏற்பட்ட சன்டையில் இந்த காட்டெருமை கிணற்றில் தவறி விழுந்துள்ளது. கிணறு ஆழமாக இருந்ததால் காட்டெருமை தப்பிக்க எடுத்த போராட்டத்தால் களைப்படைந்து தண்ணீரை குடித்து இறந்துள்ளது. உடல் கூறு பரிசோதனைக்குப்பின் அடக்கம் செய்யப்படும் என்றார். தொடர்ந்து வன விலங்குகளின் மரணங்கள் வனத்துறையினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.