
கோவைமாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தின் சில பகுதிகளில் புலிகளின் நடமாட்டம் இருப்பது கேமிரா ட்ராப் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.மேலும் கேமிரா ட்ராப்பின் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதால்,இன்னும் சில மாதங்களில் இங்குள்ள புலிகளின் எண்ணிக்கை குறித்து துல்லியமாக தெரியவரும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ளது ஆனைமலை புலிகள் காப்பகம்.இதில் மானாம்பள்ளி,உலாந்தி,பொள்ளாச்சி,வால்பாறை மற்றும் உடுமலை,அமராவதி என ஆறு வனச்சரகங்கள் உள்ளன.இந்த வனப்பகுதிகளில் யானை,புலி,பல வகை மான்கள்,செந்நாய்,காட்டுமாடு, காட்டெருமை,சிங்கவால் குரங்கு,கரடி என பல்வேறு வகையான விலங்குகள் உள்ளன.
ஆண்டுதோறும் இந்த வனப்பகுதிகளில் உள்ள புலிகள்,யானைகள் உள்ளிட்ட விலங்குகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெறும்.இந்தக்கணக்கெடுப்பின் போது,விலங்குகளின் எச்சங்கள்,அவற்றின் காலடித்தடங்கள்,இறந்து கிடக்கும் இரை விலங்குகள் ஆகியவற்றைக் கொண்டு,விலங்குகளின் எண்ணிக்கை தோராயமாக கணக்கிடப்பட்டு வந்துது.
ஆனால்,புலிகளின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு மட்டும் துல்லியமான முடிவுகளைக் காட்டவில்லை.கடந்த ஆண்டு வரை புலிகளின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பின்போது,அவற்றின் எச்சங்கள்,காலடித் தடங்கள், இரைவிலங்குகள் உண்ணப்பட்ட விதம் ஆகியவற்றைக் கொண்டு கணக்கெடுப்பு நடந்தாலும்,புலிகளின் எண்ணிக்கை குறித்து அறிந்து கொள்ள புலிகளிக் காலடிச் சுவடுகளை,பிளாஸ்டர் ஆப் பாரீஸ் மூலம் அச்செடுத்து அவற்றை ஒப்பிட்டுப் பார்ப்பதையும்,அதிலுள்ள மாறுபாடுகள் குறித்த விபரங்களை சேர்ப்பதன் மூலம் மட்டுமே புலிகளின் எண்ணிக்கையை, வனத்துறையினர் கணக்கிட்டு வந்தனர்.
ஆனால் நம்பகமற்ற இம்முறையின் மூலம்,புலிகளின் எண்ணிக்கை குறித்து உண்மையான விபரங்களை அறிய முடியாது என புலிகளைப் பற்றிய ஆராய்ச்சியாளர்கள்,அரசுக்கு தெரிவித்து வந்தனர்.மேலும் கேமிரா ட்ராப் எனப்படும் கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் எடுக்கப்படும் படங்களின் மூலம் மட்டுமே புலிகளின் எண்ணிக்கையை துல்லியமாகக் கணக்கிட முடியும் என்றும் அவர்கள் தெரிவித்து வந்தனர்.
கடந்த இருபது ஆண்டுகளாக அவர்கள் போராடியதையடுத்து,கடந்த ஆண்டில்,புலிகள் சரணாலயங்களாக அறிவிக்கப்பட்ட,வனப்பகுதிகளில் கேமிரா ட்ராப் வைக்க மத்தியஅரசு அனுமதித்தது.
இதனையடுத்து ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட 21 இடங்களில் கேமிரா ட்ராப் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது.இந்நிலையில் மானாம்பள்ளி வனச்சரகத்திற்குட்பட்ட,மீன்பாறை மற்றும் நாய்க்குன்று,உலாந்தி வனச்சரகத்தில் சின்னாறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த கேமிரா ட்ராப்பில்,புலியின் படங்கள் பதிவாகியுள்ளது.
ஆண்புலிகளின் வாழிடம் சுமார் 60.ச.கி.மீ பரப்பளவும்,பெண்புலிகளின் வாழிடம் சுமார் 25.ச.கி.மீ பரப்பளவும் கொண்டது என்பதால்,தற்போது கேமிரா ட்ரர்ப்பில் பதிவான படங்களில் புலிகளின் உடம்பில் உள்ள கறுப்புப் பட்டைகளில் காணப்படும் வேறுபாடுகளைக் கொண்டு,எவ்வளவு புலிகள் எனக் கணக்கிடும் பணி நடைபெற்றுவருகிறது.
மேலும் கேமிரா ட்ராப்பின் மூலம் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதால் இன்னும் சில மாதங்களில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள புலிகளின் எண்ணிக்கை குறித்து துல்லியமாக அறிந்து கொள்ளமுடியும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கேமிரா ட்ராப் செயல்படும் விதம்.-முதலில் புலிகளின் நடமாட்டம் இருப்பதற்கான குறைந்தபட்ச வாய்ப்புள்ள இடங்களைத் தேர்வு செய்து கேமிரா ட்ராப்கள் பொருத்தப்படும். இரு கேமிராக்களுக்கு இடையே குறைந்தது 1.5 கி.மீ.தூரம் இருக்கும் வகையில் பொருத்தப்படுகிறது.
இவ்வகைக் கேமிராக்களுடைய லென்ஸ்களின் பார்வையில் ஏதேனும் உருவங்கள் அசைவது மற்றும் இதன் அருகாமையில் வரும் விலங்குகளின் உடல் சூட்டினையும் அறியும் வகையில் பொருத்தப்பட்டுள்ள இன்பரா ரெட் சென்சார்கள் மூலம் கேமிராக்கள் தானியங்கி முறையில் செயல்படுகிறது.
சுமார் 25 மீட்டர்கள் தூரம் வரையும் எல்லையாகக் கொண்டு இக்கேமிரா செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதனால் இந்த எல்லையில் எந்த உயிரினம் வந்தாலும் படங்கள் பதிவாகும்.
புலிகளின் உடலில் காணப்படும் கறுப்புப் பட்டைகள் மனிதனின் கை ரேகைகளைப் போல,வேறுபாடுகளைக் கொண்டதாகும்.இதனை ஆராய்வதன் மூலம் படங்களில் இருவேறு சமயங்களில் பதிவாகும் புலிகளின் கறுப்புப்பட்டைகளைக் கொண்டு,புலிகளின் எண்ணிக்கை பதிவு செய்யப்படுகிறது.
புலிகள் மட்டுமின்றி,யானைகள் உள்ளிட்ட விலங்குகள் மூலம் இக்கேமிராக்களுக்கு,பாதிப்பு வராதவகையில்,கண்மறைவாக மரங்கள் மற்றும் பாறைகளின் இடுக்குகளில்,கேமிராக்களுக்கு என வடிவமைக்கப்பட்ட இரும்புப் பெட்டிகளில் பலமாகப் பொருத்தப்படுகிறது.