
நீ என்ன செய்யப் போகிறாய்..? - wild life conservation.1வனம் மற்றும் வனஉயிரினங்கள் குறித்த விழிப்புணர்வு தற்போது உலக அளவிலான பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது.
மனிதர்கள் இல்லாமலேயே வனமும்,வன விலங்குகளும் உயிர் வாழ முடியும்.ஆனால் மனிதர்களாக இருந்து கொண்டு,வனத்தை அழிக்கும் பணியில் ஈடுபடுவது விலங்குகளின் உரிமையில் அத்துமீறித் தலையிடுவதாகும்.வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார் வாழ்ந்த நாட்டின் மக்கள் வேட்டைகளின் மூலமும்,சுயநலத்திற்காகவும் வனங்களை,வன உயிரினங்களை அழிப்பது ஒரு வெட்கக்கேடான செயலாக மனிதன் உணரவில்லை என்பது கவலை அளிப்பதாகும்.
வனங்களைப் பாதுகாப்பதென்பது ஏதோ கருணையினால் மட்டும் சொல்லப்படுவதில்லை.வனங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று குரல் கொடுப்பவர்கள் அனைவரும்,மிக்க மனிதநேயமுடையவர்களே. ஏனெனில்,வனங்களை அழிப்பதன் மூலம்,மனிதனின் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான நீர்,நிலம்,காற்று ஆகிய அவசியத் தேவைகளையும் சேர்த்தே அவன் அழித்துக்கொண்டிருக்கிறான் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.
உதாரணமாக,சோலைக் காடுகளில் உள்ள ஒவ்வொரு புல்லும் நமக்கான நீரைச் சேமிப்பதில் பங்காற்றுகிறது.மழைக்காலத்தில் ஒவ்வொரு சதுரஅடியிலும் உள்ள புற்கள் நீரை சேமித்து சொட்டாக விடுவதன் மூலம்,ஏற்படுகிறது சிற்றோடைகள்.அவையே பின்னர் காட்டாறுகளாகவும்,நதியாகவும் உருமாறி,மனிதனுக்கான ஆறுகளாகவும், கால்வாய்களாகவும், அணைகளாகவும், அவனது வீட்டின் குடிநீர்க் குழாய் வரை வந்து சேர்கின்றது.
இப்படி காட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும் உள்ள செடி,கொடி,மரம்,ஊர்வன பறப்பன உட்பட விலங்குகள் அனைத்துமே,ஒரு சங்கிலித் தொடராக இணைந்து,தனது வாழ்க்கையோடு இணைந்து மனிதர்களுக்கான சேவைகளையும் புரிகிறது.
ஆனால் காடுகளை வளர்க்கும் சதவீதத்தைவிட,அதனை அழிக்கும் சதவீதம் ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் ஒவ்வொரு பகுதியில்,சமுதாயத்திற்கான வளர்ச்சி என்ற பெயரில் அழிக்கப்பட்டு வருவது பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது.
சுருக்கமாகச் சொல்லப்போனால்,அணுகுண்டுகளை வெடிப்பதன் மூலம் நடைபெறும் அழிவு என்பது உடனடி விளைவு.அதே போன்று காடுகளை அழிப்பது என்பது சற்று காலம் கடந்த விளைவு. ஆனால் இரண்டிலும் விளைவுகள் என்னவோ ஒரேமாதிரியாகத்தான் இருக்கும்.
எனவேதான் வனம் குறித்த ஆராய்ச்சியாளர்களும்,தற்போது உலக அளவில் மட்டுமின்றி உள்@ர் வரை வனங்களைக் காப்பது குறித்த அக்கறையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
நீ என்ன செய்யப் போகிறாய்.?
No comments:
Post a Comment