பொள்ளாச்சி.ஏப்.12.கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள காட்டம்பட்டி பகுதி விவசாயி ஒருவருக்கு சான்றிதழ்கள் வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராமநிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புப் போலீசார் பொறிவைத்துப் பிடித்தனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள காட்டம்பட்டியைச் சேர்ந்தவர் சிவக்குமார்.இவர் தனது தோட்டத்தில் அமைத்திருந்த சொட்டுநீர்ப் பாசனத்திற்கான மானியத்தை தமிழகஅரசிடமிருந்து பெறுவதற்காக முயற்சித்து வந்தார்.இதற்கான சிட்டா,அடங்கல் உள்ளிட்ட சில சான்றிதழ்களைப் பெறுவதற்காக அப்பகுதி கிராமநிர்வாக அலுவலரான காளிமுத்துவிடம் சென்று கேட்டபோது, அச்சான்றிதழ்களை வழங்குவதற்கு ரூ.2 ஆயிரம் லஞ்சமாகத் தரவேண்டும் என காளிமுத்து வற்புறுத்தியுள்ளார்.
இதனால் அதிருப்தியுற்ற சிவக்குமார் கோவை லஞ்சஒழிப்புப் போலீசாரிடம் புகார் செய்தார்.இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சண்முகப்ரியா தலைமையில் காட்டம்பட்டி கிராமநிர்வாக அலுவலகத்திற்கு வந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்,அருகாமையில் மறைந்திருந்து,சிவக்குமாரிடம்,காளிமுத்து ரசாயனம் தடவப்பட்ட ரூ.2.ஆயிரம் ரொக்கப்பணத்தை லஞ்சமாகப் பெற்றபோது, கையும் களவுமாகப் பிடித்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கிராமநிர்வாக அலுவலரைக் கைது செய்துள்ளனர்.இதனாதல் அப்பகுதியில் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment