பொள்ளாச்சி.அக்.18. நாடுமுழுவதம் ஒரே நாளில் கொண்டாடப்படும் தீபாவளித் திருநாள் கோவை மாவட்டம் பொள்ளாச்சியருகே,கிணத்துக்கடவையடுத்துள்ள வடசித்தூரில் மட்டும் இரண்டு நாள் கொண்டாட்டமாக விளங்குகிறது.இவ்வாறு இரண்டாவது நாளில் கொண்டாடப்படும் தீபாவளியை மயிலந்தீபாவளி என அப்பகுதி மக்கள் அழைக்கின்றனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள கிணத்துக்கடவு அருகே அமைந்துள்ளது வடசித்தூர்.நாடு முழுவதும் ஒரேநாள் மட்டும் கொண்டாடப்படும் தீபாவளிப்பண்டிகை இங்கு மட்டும் இரண்டு நாள் கொண்டாடுவது தனிச்சிறப்பு பெற்றுள்ளது.
மயிலந்தீபாவளி என்றழைக்கப்படும் இரண்டாவதுநாள் கொண்டாட்டத்தின்போது தேர்த்திருவிழாவைப் போன்று இங்கு குழந்தைகளை மகிழ்விக்கும் பொம்மைக்கடைகள் முதல் பெரியவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்களாக தூரி,ராட்சதராட்டினம் வரை ஏராளமான அம்சங்கள் இங்கே அமைக்கப்படுகின்றன.
காலை முதல் உறவினர்கள் வருகையோடு துவங்கும் மயிலந் தீபாவளி,மதியம் கறிவிருந்து,மாலையில் கொண்டாட்டம் என களை கட்டுகிறது.இங்கு வசிக்கும் ஒருபிரிவினர்,அமாவாசை நாளில் அல்லது செவ்வாய்க்கிழமை வரும் தீபாவளியன்று அசைவம் சாப்பிடாத பழக்கம் உடையவர்களாதலால் அதற்கு அடுத்த நாள் அசைவம் சாப்பிடுவதும்,ஊரிலுள்ள உறவினர்களையெல்லாம் அழைத்து விருந்து வைப்பதுமாக கடந்த 300 ஆண்டுகளுக்கு முன் துவங்கிய மயிலந் தீபாவளி,தற்போது வடசித்தூருக்கு மட்டுமல்ல,சுற்றுப்புறப்பகுதிகளிலுள்ள 10.க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் சாதிமத வேறுபாடின்றி,பொதுவான திருவிழாவாக மாறியிருப்பது மயிலந் தீபாவளியின் சிறப்பாக விளங்குகிறது.
No comments:
Post a Comment