20 கிலோ எடைகொண்ட 2 தந்தங்கள் பறிமுதல்.!
இருவர் கைது.! 4 பேருக்கு வலை வீச்சு.!
பொள்ளாச்சி.ஜுன்.13 கோவைமாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள கோட்டூர்-மலையாண்டிப்பட்டணத்தில்,யானைத்தந்தங்கள் இரண்டை, வனத்துறையினர் கைப்பற்றினர்.இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் தலைமறைவான 4 பேர் தீவிரமாகத் தேடப்பட்டு வருகின்றனர்.
கோவைமாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள கோட்டூர் மலையாண்டிப்பட்டணத்தில் உள்ள இருசக்கர வாகனப்பழுது பார்க்கும் பட்டறை ஒன்றின் உரிமையாளரான முகமதுபாரி என்பவர் இரண்டு யானைத்தந்தங்களை விற்பனை செய்ய முயல்வதாக பொள்ளாச்சி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து,ஆனைமலை புலிகள் காப்பக உதவி வனப்பாதுகாவலர் தியாகராஜன் தலைமையில் பொள்ளாச்சி வனச்சரகர் வீரமணி உட்பட வனத்துறையினர் சம்பவ இடத்தில் இன்று அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.இச்சோதனையில்,மொத்தம் சுமார் இருபது கிலோ எடை கொண்ட இரண்டு யானைத்தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனைக் கைப்பற்றிய வனத்துறையினர்,பட்டறை உரிமையாளரான முகமது பாரி மற்றும்,தந்தங்களை விலைக்கு வாங்கிச் செல்ல வந்த தேனிமாவட்டம் சிலையாம்பட்டியைச் சேர்ந்த சந்தானம் ஆகியோரை உடனடியாகக் கைது செய்தனர். இருசக்கர வாகனப்பழுது பார்க்கும் பட்டறையிலிருந்து தந்தங்கள் கைப்பற்றப்பட்டதால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள வனத்துறை அதிகாரிகள்,இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் நான்குபேரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
நம்ம ஊர் பரவாயில்லை!
12 years ago
No comments:
Post a Comment