வனவிலங்குகளின் தாக்குதல்களிலிருந்து
பொதுமக்களைக் காக்க நடவடிக்கை-மாவட்ட ஆட்சியர்
பொள்ளாச்சி.டிச.14 கோவை மாவட்டம் வால்பாறையில்,தொடர்ந்து வனவிலங்குகளின் தாக்குதலுக்குள்ளாகும் பொதுமக்களைக் காக்கும் வகையில்,குடியிருப்புப் பகுதிகளிலுள்ள புதர்களை அகற்றுவது,சாலைகளை சீரமைப்பது உள்ள்pட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக, பொள்ளாச்சியில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் மாவட்டஆட்சியர் உமாநாத் தெரிவித்துள்ளார்.
கோவைமாவட்டம் வால்பாறை தேயிலைத் தோட்டக்குடியிருப்புகளில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள்,சிறுத்தைப்புலி மற்றும் காட்டுயானைகள் உட்பட வனவிலங்குகளின் தாக்குதலுக்குள்ளாவது தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்துவரும் நிலையைத் தவிர்ப்பதற்காக,தமிழக அரசின் வழிகாட்டுதல்களுடன்,கோவை மாவட்டம் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் திரு.உமாநாத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் திரு.கோவைதங்கம், வால்பாறை நகரமன்றத் தலைவர் கணேசன்,ஆனைமலை புலிகள் காப்பகத்தின் உதவிவனப்பாதுகாவலர் தியாகராஜன்,மற்றும் தேயிலைத் தோட்டஅதிபர்கள் சங்கப்பிரதிநிதிகள்,அரசுப் போக்குவரத்துக்கழக அதிகாரிகள்,நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
வால்பாறை தேயிலைத் தோட்டக்குடியிருப்புகளில் வாழை,உள்ளிட்ட வனவலிலங்குகளின் கவனத்தைக் கவரும் வகையில் பயிர்களும்,நாய்,கோழி போன்ற சிறுவிலங்குககளை வளர்க்கக் கூடாது என்றும், அறிவுறுத்தப்பட்டது.
மேலும்,குடியிருப்புகளின் மிகஅருகாமையில் உள்ள புதர்கள் மற்றும் தேயிலைச் செடிகளில்,சிறுத்தைப்புலிகள் தஞ்சம் அடையும் நிலையுள்ளதால் இவற்றை அகற்ற தேயிலைத் தோட்ட அதிபர்கள் முனவரவேண்டும் என்றும் வனத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதேபோல்,வன எல்லையை ஒட்டியுள்ள சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டத்தைக் குறைக்கும் வகையில்,பேருந்து செல்லும் வசதியுள்ள அனைத்து சாலைகளிலும் அரசுப்போக்குவரத்துக் கழத்தின் சார்பில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கவும்,இதற்காக தனியார் தேயிலைத் தோட்டங்களுக்கு சொந்தமான சாலைகளை நகராட்சி அல்லது நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் எனவும் இக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் ஆலோசனைகளைத் தெரிவித்தனர்.
இதனையடுத்து உடனடியாக இந்த ஆலோசனைகளை அமல்படுத்த,தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் திரு.உமாநாத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment