பொள்ளாச்சி.டிச.22.கோவைமாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள கெஜமுடி தேயிலைத் தோட்டத்தில்,வைக்கப்பட்டிருந்த கூண்டிலிருந்து வலைகளையும்,கம்பிகளையும் கடித்தும்,வளைத்தும் தப்பிய சிறுத்தைப்புலி மீண்டும் சிக்கியது.இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோவைமாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள தாய்முடி எஸ்டேட்டில் வசிக்கும் சரண்யா என்ற சிறுமி கடந்த சிலதினங்களுக்கு முன்பு சிறுத்தைப்புலியால் தாக்கப்பட்டு,படுகாயமடைந்தார்.
இதனையடுத்து வனத்துறையினர்,அந்த சிறுத்தையைப் பிடிப்பதற்காக,தாய்முடி மற்றும் கெஜமுடி எஸ்டேட் பகுதியில் கூண்டுகளை வைத்தனர்.இதனையுடத்து கடந்த 11.ஆம் தேதியன்று,நள்ளிரவில்,இக்கூண்டில் சுமார் 3 வயதுள்ள சிறுத்தைப்புலி ஒன்று சிக்கியது. ஆனால்,சுமார் 4 மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு,தான் சிக்கிய கூண்டின் கம்பிகள்,மற்றும் வலைகளை கடித்தும்,வளைத்தும் கூண்டிலிருந்து வெளியேறிய சிறுத்தைப்புலி தப்பி வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது.இதனால் வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அதிர்ச்சியடைந்தனர்.பிடிபட்ட சிறுத்தைப்புலியை வனத்துறையினரெ விடுவித்துவிட்டனர் என்ற குற்றச்சாட்டும் பொதுமக்களிடையே இருந்தது.
இதனையடுத்து கடந்த பதினொரு நாட்களாக,மீண்டும் மூன்று இடங்களில் கூண்டுகளை வைத்து,வனத்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில்,நேற்று இரவு அதே சிறுத்தைப்புலி கெஜமுடி அப்பர் டிவிசன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிக்கியது.இது குறித்து தகவலறிந்த மானாம்பள்ளி வனச்சரகர் ஆரோக்கியராஜ் சேவியர் மற்றும் வனத்துறையினர் உடனடியாக சம்பவஇடத்திற்கு வந்து சிறுத்தை பிடிபட்ட கூண்டினைச் சுற்றி,தகரங்களால் மறைத்தும்,கற்களை அடுக்கியும்,சிறுத்தைப்புலி தப்பிச்செல்ல முடியாதபடி,பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
இதனையடுத்து,சிறுத்தைப்புலி உரிய மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு,ஆனைமலைபுலிகள் காப்பகத்திற்குட்பட்ட அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்படும் என்றும் ஆரோக்கியராஜசேவியர் தெரிவித்துள்ளார்.
சிறுத்தை பிடிபட்டது குறித்து பொதுமக்களிடையே மகிழ்ச்சி ஏற்பட்டிருந்தாலும்,இப்குதியில் மேலும் ஏராளமான சிறுத்தைப்புலிகள் தங்கள் குட்டிகளுடன் வலம்வருவதாகவும்,அவற்றையும் தொடர்ந்து கண்காணித்துப் பிடிக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
visuals in youtube-sunpollachi
நம்ம ஊர் பரவாயில்லை!
12 years ago
No comments:
Post a Comment