பொள்ளாச்சி-நவ.17 திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணையருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் விஷம் அருந்தி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ளது திருமூர்த்தி அமணலிங்கேஸ்வரர் கோவில்.இக்கோவிலின் அருகே,மிட்டாய்க் கடை வைத்து நடத்திவருபவர்கள் நடராசன்-பாப்பாத்தி தம்பதியர். இவர்களுடைய மகள் செல்விக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு 8 வயதில் கமலி என்ற பெண்குழந்தை உண்டு.பின்னர் செல்வி குமாரிடமிருந்து விவாகரத்து பெற்றார். இந்நிலையில் செல்விக்கு கிருஷ்ணன் என்பவருடன் இரண்டாவது திருமணம் நடைபெற்றதையடுத்து ஸ்ரீனிவாசன் என்ற ஒருவயது ஆண்குழந்தையும் உண்டு. இதனிடையே செல்விக்கும்,இரண்டாவது கணவர் கிருஷ்ணனுக்கும் இடையே கருத்துவேறுபாடு எழுந்ததால்,குடும்பத்தில் அடிக்கடி சச்சரவு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று இரவு செல்வி தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தன் தாய் பாப்பாத்தியுடன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். வீட்டினுள் 4 பேரும் தற்கொலை செய்து கொண்டு இறந்து கிடப்பதை இன்று காலையில் கண்ட நடராசன் பெரிதும் அதிர்ச்சியடைந்தார்.பின்னர் இது குறித்து தகவலறிந்த தளி போலீஸார்,சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களைக் கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு,வழக்குப் பதிவுசெய்து தீவிரவிசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் உடுமலை சிவசக்தி காலனியைச் சேர்ந்த கோபிகா என்ற பெண் நேற்று இரவு,தவறுதலாக தரையில் கிடந்த மின்சார வயரை மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து இறந்தார்.இவருடைய அலறல் சப்தம் கேட்டு,கோபிகாவைக் காப்பாற்றச் சென்ற அவருடைய தந்தை ரவி என்பவரும் உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர். இச்சம்பவம் குறித்து உடுமலை போலீசார் வழக்குப் பதிவு செ;யது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடுமலையில்,ஒரே நாளில் இருவேறு சம்பவங்களில் ஆறு பேர் இறந்துள்ளது அப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment