
அண்மையில் டெல்லி உயர்நீதி மன்றம் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு சட்டரீதியான அங்கீகாரத்தை கொடுக்கும் வகையில் அளித்த பரபரப்பான தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. பழமைவாதிகளும், கலாச்சாரக் காவலர்களும், வானத்துக்கும், பூமிக்குமாக குதித்தார்கள்.இதுகுறித்து இந்தியாவில் இருக்கும் பல கட்சிகள் தங்களது கருத்துக்களைக் கூறாமல், மௌனமாக இன்றுவரை இருந்துவருகின்றன. பெரும்பான்மையான அரசியல் கட்சிகளுக்கு இது குறித்து எவ்வித பிரக்ஞையும்,தேடலும் இல்லாததுமே இதற்கு காரணம்.
இப்படிப்பட்ட தனிமனிதனின் உரிமையைப் பாதுகாக்கும் இத்தீர்ப்பிற்குப் பிறகும்கூட இதுகுறித்த சிந்தனையோ,கருத்தோட்டங்களோ வராமலிருப்பது எவ்வளவு மேலோட்டமான அரசியல் கோட்பாடுகளை இக்கட்சிகள் கொண்டுள்ளன என்பதைக்காட்டுகிறது. நல்லவேளையாக இருகம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டும் எவ்வித ஆரவாரமுமின்றி,இச்சட்டத்தை வரவேற்றிருக்கின்றன.
இத்தீர்ப்பின்மீது இடைக்காலத்தடை விதிக்கக்கோரியும்,சட்டத்தை திரும்பப்பெறக்கோரியும்,உச்சநீதிமன்றத்தில் வாதாடி வருகின்றனர் நமது கலாச்சாரக்காவலர்கள்.அரசின் கொள்கை முடிவை அறிவிக்குமாறு உச்சநீதி மன்றம்,மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.தற்போது இச்சட்டம் டெல்லியில் மட்டுமே நடைமுறையில் உள்ளது.
இதற்கு ஒருபடி மேலாக,இந்தியத் தேர்தல்ஆணையம்,அரவாணிகள் என்றழைக்கப்படும் திருநங்கைகளுக்கான பாலின அங்கீகாரம் பற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்கதொரு முடிவை அறிவித்துள்ளது. இம்முடிவின்படி அரவாணிகள், ஆண்,பெண், என்ற இருவகைகளில் மட்டும் தங்கள் பாலினத்தை குறிப்பிடமுடியும் என்ற நிலையை மாற்றி, மூன்றாம் பாலினமாக “மற்றவர்கள்” என்று குறிப்பிட்டு தங்களது தனித்த அடையாளத்தை நிலைநாட்டிக் கொள்ளமுடியும்.
தேர்தலில் பங்கேற்கவும்,கல்வி பயிலவும்,வேலை வாய்ப்புகள் பெறவும், சமூகத்தில் மற்றவர்களுடன் கலந்து வாழவும்,இந்த அங்கீகாரம் திருநங்கைகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
இதைப்போலவே தற்போது தமிழகஅரசு சட்டரீதியான பால்மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள அங்கீகாரம் அளித்து,திருநங்கைகள் வாழ்வில் ஒளியேற்றிவைத்துள்ளது.இதுவரை கசாப்புக்கடைகளுக்கு இணையாக உயிர்போகும் வலியுடன் முற்றிலும் சுகாதாரமற்ற சூழ்நிலையில் சட்டத்திற்கு புறம்பாக,உயிருக்கு எவ்வித உத்தரவாதமின்றி கேவலமானமுறையில் நடத்தப்பட்டுவந்த உறுப்புமாற்று அறுவைசிகிச்சை,இனி அரசுபொது மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும், சுகாதாரமான முறையில் தக்க சோதனைகளுக்குப் பிறகு நூறுசதவீத பாதுகாப்புடன் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடியும்.
ஏற்கனவே,தங்களை உடலால் ஆணாகவும்,மனதளவில் பெண்ணாகவும் வாழ்ந்துவரும் அரவாணிகள் தங்களின் மனவலியுடன் கொடூரமான உடல்வலியையும்,அனுபவித்துக் கொண்டிருந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து, தங்களின் இருத்தலைக் கௌரவமான முறையில் வெளிப்படுத்திக் கொள்ள வழிசெய்துள்ள இச்சட்டம் மேன்மைக்குரியதாகும்.மேலும்,தமிழகஅரசின் “கலைஞர் காப்பீட்டு திட்டம்” இவர்களுக்கு பிற மருத்துவ வசதிகளை வழங்கும் பாதுகாப்பையும் உறுதிசெய்துள்ளது.
மத்திய மாநிலஅரசுகள் திருநங்கைகள் மேல் இவ்வளவு அக்கறையும், அனுசரணையும் காட்டத்துவங்கியுள்ள நேரத்தில், திரைப்படங்களில்,அதில் இடம்பெறும் பாடல்களில் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில், கதைகளில் இவர்களைக் கேவலப்டுத்தும் நிலைமை தொடர்வதை காண சகிக்கவில்லை. இந்நிலை மாற்றப்படவேண்டும்.இதனைத் தடுக்க, வன்கொடுமைச்சட்டத்தைப்போன்று,”அரவாண்கொடுமைச் சட்டம் அல்லது திருநங்கை பாதுகாப்புச்சட்டம்” என இயற்றவேண்டும்.திரைப்படத் தணிக்கைத்துறை,திரைப்படங்களில் அரவாணிகள் கேவலமான முறையில் சித்தரிக்கப்படும் போக்கினை மாற்ற தீவிரமுயற்சி எடுக்கவேண்டும்.
ஆணிலிருந்து பெண்ணாக அல்லது பெண்ணிலிருந்து ஆணாக மாறும் இவர்களது உருவ மாற்றங்கள்,நடை,உடை,பாவனைகளையெல்லாம் இயற்கை தந்த “பாலின ஊனம்” என்று ஏற்றுக்கொள்ள மறுக்கும்,பக்குவமற்ற சமூகம் மட்டுமின்றி, இவர்களது பெற்றோர்களும் உடன்பிறப்புகளுமே,புறக்கணிக்கும் கொடுமையும் அவலமும் நீடிக்கிறது.இவர்கள் மீது கடுமையாக வெறுப்பை உமிழும் இந்த நிலை தடுக்கப்பட்டாக வேண்டும்.
பெரும் மன உளைச்சலுக்கும்,குடுமபத்தாரின் வெறுப்புகளுக்கும் ஆளாகும் அரவாணிகளில் பெரும்பாலோர்,பள்ளிக் கல்வியைக் கூட தொடரமுடிவதில்லை பள்ளிப்பருவத்திலேயே இவர்கள் மனம் “பால்மாறாட்டம்" கொள்வதால் ஏற்படும் மனஎழுச்சி,இவர்கள் அடிப்படைக்கல்வியைக் கூட கற்கமுடியாமல் தடை செய்துவிடுகிறது.
பள்ளியில் சக மாணவர்களின் கேலிகளும்,கிண்டல்களும் கவனச்சிதைவையும், மனஉளைச்சலையும் உண்டாக்குவதால் என்ன முயற்சி செய்தபோதும் அவர்கள் படிப்பைத் தொடரமுடியாத நிலைக்கு தள்ளப் படுகிறார்கள்.தப்பித்தவறி படித்தாலும்,அது உயர்கல்வியேயாயினும்,இவர்கள் தாங்கள் உயிர்வாழ பிச்சையெடுப்பது அல்லது பாலியல் தொழிலில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழியற்ற நிலைக்கு சென்றுவிடுகிறார்கள்.
இந்நிலைமைகளால் பாதிக்கப்பட்ட இவர்கள் இச்சமூகத்தின் மீது கோபமும் ஆத்திரமும் கொண்டு சக மனிதர்களிடம் அநாகரீகமாக நடந்து கொள்ளும் விபரீதமும் ஏற்படுகிறது.அரவாணிகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் ஒருநாடகமே இதுவன்றி, வேறல்ல என்பதைப் புரிந்து கொண்டு அனுதாபத்துடன் இப்பிரச்சினையை நாம் அணுகுவதுதான் சரியானவழி.!
அரவணைக்கும் உறவுகள்,கல்வி,வேலை வாய்ப்புகளுக்கு உத்திரவாதம் அளிக்கும் அரசு, என இவைகள் மட்டுமே அரவாணிகளின் வாழ்க்கையை மேம்படுத்தும்.அப்படிப்படட சமூகத்தில் மட்டுமே இவர்கள் பிச்சைஎடுத்து பிழைப்பதையும்,உடலை விற்று பிழைப்பதையும் தடுக்க முடியும். இவர்கள் படும் சொல்ல முடியாத துயரங்களையும் போக்க முடியும்.
இதற்கு வழிசெய்யும் வகையில் மத்திய மாநில அரசுகள் உறைவிடத்துடன் கூடிய சிறப்புப் பள்ளிகளையும்,கல்லூரிகளையும் துவக்கவேண்டும். இதன்மூலம் தன்மானத்துடன் தடையற்ற அடிப்படை மற்றும் உயர்கல்விக்கு உத்திரவாதம் ஏற்படும்.கல்வி வேலைவாய்ப்புகளில் முன்னுரிமையும்,உத்தரவாதமும் பெறும் வகையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அளிக்கும் இடஒதுக்கீட்டைப் போலவே அரவாணிகளுக்கும் “இடஒதுக்கீடு” அளிக்கவேண்டும்.
அரவாணிகள் வாழ்வுக்கென வன்கொடுமைச்சட்டம்,சிறப்புக்கல்வி நிறுவனங்கள், இடஒதுக்கீடு ஆகியன அரசால் செய்துதரப்பட வேண்டிய அதேவேளையில் மாணவர்களும்,இளைஞர்களும் அரவாணிகள் நிலைமையை அறிந்து கொள்ளும் வகையில், அவர்களை சகமனிதர்களாக மனிதநேயத்துடன் நடத்தவேண்டிய அவசியம் பற்றி உணர்த்தும் வகையிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாடத்திட்டங்கள் உருவாக்கவேண்டும்.தமிழக அரசு அறிமுகப்படுத்தும் சமச்சீர் கல்வித்திட்டத்திலும்,பாலினக் கல்வியிலும் அரவாணிகள் நிலைபற்றிய பாடத்திட்டத்தை வைக்கவேண்டும்.
நாகரீக உலகம் முழுவதிலும் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டு, தன்மானத்துடன்,மற்றவர்களுடன் சமமாகக் கலந்து வாழ்ந்து வரும் திருநங்கைகள் நிலையினைப் போல் இந்தியாவிலும் வருதல் எந்நாளோ..?
கடையினும் கடையீராகப் பிழைக்கும் திருநங்கைகளை மனிதநேயத்துடன் அரவணைப்போம்..!
நன்றி.. ..
வெளியீடு -- சங்கமம்
-ஒரு கருத்துப் பரிமாற்றக்களம் -
04.தடாகம் சாலை,வேலாண்டிபாளையம்,
கோவை-641025.
தொடர்புக்கு.98422 60605,93459 44439, 93632 42494
e.mail-texmakebrisk@gmail.com
No comments:
Post a Comment