இலவச கண்சிகிச்சைமுகாம்.! மற்றும் ஊர்வலம்.!
பொள்ளாச்சி.ஜன.6 கோவை மாவட்டம் பொள்ளாச்சியில்,சாலைப்போக்குவரத்து வாரவிழாவை முன்னிட்டு இன்று இலவச கண்சிகிச்சை முகாம் மற்றும் பள்ளிமாணவர்கள் பங்கேற்ற ஊர்வலம் ஆகியவை நடைபெற்றது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரப்போக்குவரத்து அலுவலகம் மற்றும் காவல்துறை சார்பில் சாலைப்பாதுகாப்பு வாரவிழா கொண்டாடப்பட்டுவருகிறது. இதனை முன்னிட்டு இன்று வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தில் இலவச கண்பரிசோதனை முகாம் நடைபெற்றது.இதில் வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு கண்களைப் பரிசோதித்துக் கொண்டனர்.மேலும் அவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளும் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து வாகனம் ஓட்டும்போது கடைப்பிடிக்கவேண்டிய பாதுகாப்பு ஆலோசனைகள் மற்றும் விதிமுறைகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் படக்காட்சிகளும் திரையிடப்பட்டன.
மேலும் பொள்ளாச்சி நகரமன்ற ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் சாலைப்போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. பள்ளிவளாகத்திலிருந்து துவங்கிய இந்த ஊர்வலத்தை பொள்ளாச்சி மேற்கு காவல்நிலைய ஆய்வாளர் நமச்சிவாயம் துவங்கிவைத்தார்.நகரின் முக்கியவீதிகள் வழியாகச் சென்று,மீண்டும் பள்ளி வளாகத்திலேயே முடிவு பெற்ற இந்த ஊர்வலத்தில் ஏராளமான மாணவர்களும்,ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து எதிரே வரும் வாகன ஓட்டுனர்களுக்கு, கண்களை கூசச் செய்யும் வகையில் உள்ள வாகன முகப்புவிளக்குகளின் மீது கறுப்பு வில்லைகளை ஒட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.நகரின் முக்கிய சாலைகளில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பொள்ளாச்சி மேற்கு காவல்நிலைய அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் கலந்து கொண்டனர்.
நம்ம ஊர் பரவாயில்லை!
12 years ago
No comments:
Post a Comment