பொள்ளாச்சி.ஜன.18 கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள தோணி முடி எஸ்டேட்டில் கடந்த சிலதினங்களுக்கு முன்பு சிறுவனைக் கடித்துக் குதறிக் கொன்ற சிறுத்தைப்புலி, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. இதனையடுத்து சிக்கிய சிறுத்தைப்புலி, அமராவதி வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது தோணிமுடி எஸ்டேட்.இங்குள்ள தொழிலாளர் குடியிருப்பில், கடந்த ஜன.10.ஆம் தேதி விளையாடிக் கொண்டிருந்த முகேஸ்வரன் என்ற சிறுவனை, சிறத்தைப்புலியொன்று திடீரென்று தாக்கி இழுத்துச் சென்றதில் அவன் பரிதாபமாக இறந்தான்.
இதனையடுத்து வனத்துறையினர் சார்பில் அப்பகுதியில் கூண்டு வைக்கப்பட்டு,கடந்த சில தினங்களாக மானாம்பள்ளி வனச்சரகர் ஆரோக்கியராஜ்சேவியர் தலைமையில்,வனத்துறையினர் தீவிரகண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு அந்த சிறுத்தை,வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.இதனால் அப்பகுதியிலுள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து அதற்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு,வனத்துறை மருத்துவர் மனோகரன் மூலம் மருத்துவப்பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் அதன் காலடியை வைத்து,சிறுவனைத் தாக்கிக் கொன்ற அதே சிறுத்தைப்புலிதான் என்றும் உறுதி செய்துகொண்டனர்.
பின்னர் மருத்துவர் மனோகரன் மேற்பார்வையில், லாரியில் ஏற்றி வந்த வனச்சரகர்கள் ஆரோக்கியராஜ்சேவியர்,ஜெயராமன் உட்பட வனத்துறையினர்,திருப்பூர் மாவட்டம் அமராவதி வனச்சரகத்திற்குட்பட்ட சின்னாறு வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனர்.கூண்டிலிருந்து பாய்ந்து வெளியேறிய சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.
மேலும்,வனப்பகுதியை ஒட்டி வசிக்கும் பொதுமக்கள் வனவிலங்குகளை கவரும் வகையில்,கோழி,நாய் ஆகியவற்றை வளர்க்கவும் ,வாழை உட்பட பழவகைகளை பயிரிடவும் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.
No comments:
Post a Comment