பி.எஸ்.என்.எல் -தொலைத் தொடர்புத்துறையிலிருந்து 93 மில்லியன் ஜி.எஸ்.எம் இணைப்புகளுக்கான ஒப்பந்தத்தை இறுதிசெய்ய வேண்டும் என வலியுறுத்தி,கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தொலைத் தொடர்புத்துறை ஊழியர் சங்கங்கள் இணைந்து இன்று -5.1.10-ஆர்ப்பாட்டம் நடத்தின.
பி.எஸ்.என் .எல் - தொலைத்தொடர்புத்துறையிலிருந்து 93 மில்லியன் ஜி.எஸ்.எம் இணைப்புகள் தருவதற்காக கடந்த சில மாதங்கள் முன்பாக ஒப்பந்தங்கள் கோரப்பட்டன.இதனையடுத்து பெறப்பட்ட ஒப்பந்தங்களை பரிசீலனை செய்யாமலும்,ஒப்பந்தப்படி இணைப்புகளை அளிக்காமலும் பி.எஸ்.என்.எல்- நிர்வாகம் காலம் கடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சேவைக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவும், பொதுமக்களை அதிகப்படியான செலவில் தனியார் நிறுவனங்களின் வாடிக்கையாளர்களாக்கும் திட்டத்திற்காகவுமே பி.எஸ்.என்.எல்.- நிர்வாகம், ஒப்பந்தங்களின்படி பொதுமக்களுக்கான இணைப்புகளை தருவதற்கு காலதாமதம் செய்து வருகிறது என்றும் தொலைத்தொடர்பு ஊழியர்சங்கங்கள் குற்றம் சாட்டிவருகின்றன.
எனவே உடனடியாக ஜி.எஸ்.எம். இணைப்புகளை வழங்க பி.எஸ்.என்.எல்- நிர்வாகம் முன்வரவேண்டும் என்று வலியுறுத்தி கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொலைத் தொடர்பு அலுவலகம் முன்பாக தொலைத் தொடர்பு ஊழியர்சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சசிதரன் தலைமை வகித்தார்.பிரபாகரன், எஸ்.வெங்கடாச்சலம், பிரிட்டோ அலெக்ஸாண்டர் உள்ளிட்ட ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகள் கோரிக்கை விளக்கவுரையாற்றினர்.
பொள்ளாச்சி தொலைத் தொடர்பு வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த ஊழியர்கள் திரளாக இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
மேலும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதப்பிரதமருக்கு தந்திகள் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நம்ம ஊர் பரவாயில்லை!
12 years ago
No comments:
Post a Comment