நன்றி தினமலர் நாளிதழ்
பிஞ்சுகளுக்கு விமோசனம், சமச்சீர் கல்வி!ச.ராசன்,
சென்னையிலிருந்து எழுதுகிறார்: மத்திய மனித வளத்துறை அமைச்சர் கபில் சிபல் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தில், விளையாட்டுத் துறை அமைச்சர், உருப்படியான ஒரு யோசனையை தெரிவித்துள்ளார். தினமும் ஒரு முழு பாட வகுப்பை, விளையாட்டிற்கு கட்டாயமாக ஒதுக்க வேண்டும். 1986ம் ஆண்டு கல்விக் கொள்கைபடி, "விளையாட்டு என்பது, கல்வி கற்பித்தலின் ஒரு பகுதி. உடற்கல்வியை முறையாக வழங்க வேண்டும்' என்று வகுக்கப்பட்டுள்ளது. அதிகாலையில் எழுப்பி, படிப்பு, படிப்புக்குப் பிறகு, அதி விரைவாகக் காலைக்கடன், சிற்றுண்டி முடித்து, சீருடை அணிய வேண்டும். பெருஞ்சுமை கூட்டும், கொள்ளை விலை தோள் பை சுமந்து, பள்ளியில் வரிசையாய் பாட வகுப்பு; பாடப் பயிற்சி. பின், மணியடித்து வீடு வந்தால், "ம்... ம்... புறப்படு, "டியூஷன்' வகுப்பு...' என, மணி, மணியான இளஞ்செல்வங்களின் வளர்ச்சியில் கூன் விழுந்து, தங்கக் கூண்டில் அடைத்து வளர்த்த புலி, சிறுத்தை, சிங்கக் குட்டிகளாய், தங்கள் இயல்பிழந்து பூனைகளாய், தேவாங்குகளாய்... பார்க்கவே பரிதாபம்!இந்தப் பிஞ்சுகளுக்கு விமோசனம் தான், "சமச்சீர் கல்வி!'"சமச்சீர் கல்வி' முறையை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும். தமிழகம் அதில், முன்னோடியாய்த் திகழ வேண்டும்; "மெக்காலே' ஆரம்பித்து வைத்த கல்வியின் மிச்சசொச்சமும், முழுவதுமாக மாற்றப்பட வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தும், அரசு உதவி பெறும் நிலையங்களாக வேண்டும்.வாராது வந்துள்ள இந்த வாய்ப்பை, வகையாகக் கல்வித் துறை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இப்படிச் செய்தால், ராகிங், பஸ் டே, அரசியல் சார்ந்த மாணவர் மன்றத் தேர்தல்கள் போன்ற கூத்துகள் ஒழியும். இளைஞர்களின் அளவிட முடியாத பேராற்றல், ஆக்கப்பூர்வமான சிந்தனை செயல்களாக, மடைமாற்றம் பெறும்!வளரும் இளந்தலைமுறை, இந்தியத் திருநாட்டை பேராண்மைமிக்க, மிகப்பெரிய வள நாடாக மலரச் செய்வர்!
No comments:
Post a Comment