பொள்ளாச்சி ரயில் நிலையத்திலுள்ள சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுமைதூக்கியை,அதன் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில், அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டும் என்று பொள்ளாச்சி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலுள்ள ரயில்நிலையம், கடந்த 1872.ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் கோவையில் துவங்கப்பட்ட ரயில்நிலையத்தின் ஒருபகுதியாக துவங்கப்பட்டது. கோவையிலிருந்து பொள்ளாச்சி வழியாக திண்டுக்கல் வரையும்,பொள்ளாச்சியிலிருந்து கேரளமாநிலம் பாலக்காடு செல்லும் வகையிலும் மீட்டர்கேஜ் இருப்புப் பாதைகள் அமைக்கப்பட்டன.
பொள்ளாச்சி,உடுமலை பகுதியில் விளையும் நெல்,கரும்பு,வாழை மற்றும் தேங்காய்கள், வால்பாறையில் விளையக்கூடிய தேயிலை மற்றும் வனப்பகுதிகளில் விளையும் தேக்கு மரங்கள் ஆகியவற்றை சென்னை,கல்கத்தா உட்பட பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லும் வகையில் இப்பாதைகளை அப்போதைய ஆங்கிலேய அரசு அமைத்தது.இவ்வகையில் பொள்ளாச்சி ரயில் நிலையம் ஒரு பிரதான இடத்தை வகித்தது என்பது வரலாறு.
இந்த ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்படும் பொருட்களை ரயில் பெட்டிகளில் ஏற்றுவதற்கு வசதியாக,கடந்த 1863.ஆம் ஆண்டு இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட சுமைதூக்கியை ஆங்கிலேயர்கள் 1872.ஆம் ஆண்டு இங்கு நிறுவினர்.
மனிதர்களால் இயக்கப்படும் வகையில் அமைந்த இந்த சுமைதூக்கியின் பல்சக்கரங்கள் உட்பட சில உதிரிபாகங்கள் இரும்பால் ஆனதாக இருந்தாலும்,பிரதானமாக எடையை தூக்கும் பகுதி முழுவதும் மரத்தால் ஆனது என்பதும், இதன் மூலம் சுமார் 5 டன் எடை வரையுள்ள பொருட்களைத் தூக்கமுடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சுமைதூக்கியை எவ்வித பழுதுமின்றி இதுவரை பயன்படுத்தி வந்த ரயில்வே நிர்வாகம், தற்போது கோவை பொள்ளாச்சி திண்டுக்கல் அகலரயில்பாதை அமைப்பதற்கான பணிகளை துவங்கியுள்ள நிலையில் இங்கு பயன்படுத்தமுடியாத நிலையிலுள்ள ரயில்பெட்டிகள்,மற்றும் இரும்புப்பொருட்களை தனியாருக்கு ஏலம் விட முயற்சித்து வருகிறது.அந்தப் பட்டியலில் சுமார் 150 ஆண்டுகள் பழமையான இந்த சுமைதூக்கியையும் சேர்த்துள்ளது.
இதனால் அதிருப்தியுற்ற பொதுமக்கள் பழமைவாய்ந்ததும்,இன்னும் நல்ல நிலையில் இயங்கிக்கொண்டும் இருக்கும் இந்த சுமைதூக்கியை அருங்காட்சியகத்தில் வைத்து பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் பராமரிக்க வேண்டும் அல்லது ரயில்நிலையத்தின் முன்பாக ஒரு நினைவுச்சின்னமாக வைக்க மத்தியஅரசும்,ரயில்வே நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நம்ம ஊர் பரவாயில்லை!
12 years ago
very good story.keep it up.v vl expect many other news and stories from ur ppc tv.
ReplyDeletethank u..by siva-cbe