மேற்குத் தொடர்ச்சிமலைகளை பாதுகாக்க விழிப்புணர்வு தேவை.!
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேண்டுகோள்.!
பொள்ளாச்சி.செப்.23. கோவை,திருப்பூர் உட்பட நான்கு மாவட்டங்களுக்கும் தேவையான நீராதாரத்தை வழங்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளையும் வனங்களையும் பாதுகாக்க பள்ளி,கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு தேவையென வலியுறுத்தி சுற்றுச்சூழல் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துவருகிறது.
கோவை,திருப்பூர்,ஈரோடு மற்றும் கரூர் ஆகிய நான்கு மாவட்டங்களிலுள்ள சுமார் 4.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் பி.ஏ.பி.பாசனத்திட்டத்தின் மூலம் பாசனம் பெற்றுவருகின்றன.இப்பாசனத்திட்டத்திற்கு ஆதாரமான நீர்வளத்தை மேற்குத் தொடர்ச்சி மலைகளும் அது சார்ந்த வனப்பகுதிகளுமே வழங்கிவருகின்றன.
இதேபோல் இம்மாவட்டங்களில் பாயும் நொய்யலாறு,சிறுவாணி, மோயாறு,பவானியாறு,அமராவதி உள்ளிட்ட நதிகளின் மூலாதராமாகவும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் விளங்கி வருகின்றன.
இந்நிலையில்,மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கும் வரும் சுற்றுலாப்பயணிகளால் வனப்பகுதிகளில் காட்டுத்தீ பரவுவதும்,வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுவதும், சாதாரணமாக நிகழ்ந்து வருகிறது. மேலும் சில பகுதிகளில் நகரங்களின் விரிவாக்கம் காரணமாக நேரடியாக வனப்பகுதிகள் அழிக்கப்படுவது போன்ற காரணங்களால்,இயற்கையின் சமநிலையில் விரும்பத்தகாத மாற்றங்கள் ஏற்படுகின்றன.
இதேபோன்று தென்னிந்தியா முழுவதிலும் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருவதால் இப்பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது.
புவி வெப்பமடைவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உலக நாடுகள் கவலையடைந்து வரும் நிலையில்,பள்ளி,கல்லூரி மாணவர்கள் தங்கள் பகுதியிலுள்ள மலைகளையும்,வனங்களையும் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பெறுவதோடு,இதுகுறித்த செய்திகளை பொதுமக்களிடையே எடுத்துரைக்க வேண்டும் என்றும் இதன்மூலம் புவி வெப்பமடைவதைத் தடுக்க குறிப்பிடத்தக்க பங்காற்றமுடியும் என்றும், கோவை மாவட்டத்தில் இயங்கிவரும் ஓசை என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு மாணவர்களை சந்தித்து வேண்டுகோள் விடுத்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலுள்ள என்.ஜி.எம்.கல்லூரி மாணவ,மாணவியர்களை சந்தித்த ஓசை அமைப்பின் தலைவர் திரு.கே.காளிதாஸ் பி.ஏ.பி.பாசனத்திட்டத்திற்கு ஆதாரமாக உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளை பாதுகாப்பது குறித்தும்,இதற்காக மாணவர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் விளக்கினார்.
மேலும் கோவை,ஈரோடு,திருப்பூர் மாவட்டங்களின் நீராதாரங்களின் பிறப்பிடமாகவும்,கன்னியாகுமரி முதல் மகாராஷ்ட்ரா வரையிலுள்ள மாநிலங்களுக்குரிய நதிகளையும் தரும் மேற்குத் தொடர்ச்சிமலைகளைப் பாதுகாக்க வலியுறுத்தியும் மாணவர்களிடையே தொடர் பிரச்சார இயக்கங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்த திரு.காளிதாஸ் இம்மலைப்பகுதிகளில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்படும்போது,இங்குள்ள உயிர்ச்சூழலுக்கு தீங்கு ஏற்படாத வண்ணம் பாதுகாப்பது குறித்தும் மாநிலஅரசுகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
நம்ம ஊர் பரவாயில்லை!
12 years ago
No comments:
Post a Comment