வனவிலங்கு வாரவிழாப் போட்டிகள்.!
மாணவர்கள் பொதுமக்கள் பங்கேற்பு.!
பொள்ளாச்சி.செப்.27. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தின் சார்பில் வனவிலங்கு வாரவிழாவை முன்னிட்டு ஓவியம்,கட்டுரை,புகைப்படம் மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன.இப்போட்டிகளில் பள்ளி,கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி,பொதுமக்களும் ஆர்வமாகக் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள இந்திராகாந்தி வனவிலங்கு சரணாலயம் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் சார்பாக ஆண்டுதோறும் அக்டோபர் முதல் வாரத்தில் வனவிலங்கு வாரவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.
இந்த ஆண்டும் வனவிலங்கு வாரவிழாவை முன்னிட்டு பொள்ளாச்சி,வால்பாறை மற்றும் உடுமலையில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்களிடையே வனம் மற்றும் விலங்குகள்,மனித வாழ்க்கைக்கு அவற்றின் தேவைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக,பல்வேறு போட்டிகளையும் வனத்துறை நடத்தியது.
குறிப்பாக வனங்களில் விலங்குகள்,இயற்கைச் சூழலும் -வனவிலங்குகளும், மனிதனும் சுற்றுச்சூழலும் ஆகிய தலைப்புகளில் நடைபெற்ற ஓவியப் போட்டிகளில் மாணவ,மாணவியர் மட்டுமின்றி இப்பகுதிகளில் வசிக்கும் பெண்கள் உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டு வண்ணங்களால் தங்கள் எண்ணங்களை ஓவியமாக்கி,அதைப்பிறருக்கும் உணர்த்தினர்.
மேலும் கட்டுரை,புகைப்படம்,பேச்சு,மற்றும் விநாடிவினாப் போட்டிகளிலும் திரளாகக் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
ஆனைமலை புலிகள் காப்பக களஇயக்குனர் திரு.பசுவராஜ் தலைமையில் நடைபெற்ற இப்போட்டிகளில்,கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவ மாணவியருக்கும் பொதுமக்களுக்கும் பின்னர் வனத்துறை சார்பில் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
நம்ம ஊர் பரவாயில்லை!
12 years ago
No comments:
Post a Comment