ம.தி.மு.க.மாநாடு-வைகோவிற்கு எதிராக நோட்டீஸ்
3 பேர் கைது.!
பொள்ளாச்சி.டிச.7 கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ம.திமு.க.-விவசாய அணி சார்பில் கொங்கு மண்டல விவசாயிகள் கோரிக்கைப் பேரணி மற்றும் மாநாடு இன்று நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மரபணு மாற்ற விதைகளை அனுமதிக்கக் கூடாது அவிநாசி அத்திக்கடவு குடிநீர்த்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.கள் இறக்குவதற்கு அனுமதி அளிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இன்று ம.தி.மு.க. விவசாயஅணியின் சார்பில் கோரிக்கைப் பேரணி நடைபெற்றது.பொள்ளாச்சி நியூஸ்கீம் சாலை-பல்லடம் சாலை சந்திப்பில் தொடங்கிய பேரணி நகரின் முக்கியவீதிகள் வழியாகச் சென்று மீண்டும் துவங்கிய இடத்திலேயே முடிவுற்றது.
பின்னர் ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற கோரிக்கை விளக்க மாநாட்டில் தென்னை வளர்ச்சி வாரியத்தை பொள்ளாச்சியில் அமைக்கவேண்டும் கரும்புக்குரிய விலையாக ரூ.2500.ஐக் கொடுக்கவேண்டும்.தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்.கூட்டுறவுத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இம்மாநாட்டை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த வைகோ கத்தரி உட்பட மரபணு மாற்றவிதைகளைப் பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்றும் இது விவசாயிகளின் நிலத்தையும் பொருளாதாரத்தையும் கடுமையாக பாதித்துவிடும் என்றும் வலியுறுத்தினார்.
இதே போல் அவிநாசி அத்திக்கடவு திட்டம் ஆனைமலையாறு நல்லாறு திட்டம் ஆகியவற்றை நிறைவேற்றவும் இலவச மின்சாரத்திற்காக பதிவு செய்து விட்டு காத்திருக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக மின்இணைப்பு வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறிய வைகோ மேலும் மாநாட்டுத்தீர்மானங்கள் குறித்தும் விளக்கமளித்தார்.அப்போது தமிழகத்தில் பூரணமதுவிலக்கு கொண்டு வரவேண்டும் அல்லது தென்னை பனை மரங்களிலிருந்து கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதனிடையே பண்ணை முதலாளிகளால் ஆக்ரமிக்கப்பட்டுள்ள பஞ்சமி நிலத்தை தலித் மக்களுக்கு மீட்டுத்தர முயற்சிக்காத வைகோ பல நூறு ஏக்கர் விவசாயநிலங்களின் உரிமையாளர்களுக்காக கள் இறக்குவதை ஆதரிப்பதா என்ற கேள்வியை எழுப்பும் துண்டுப்பிரசுரங்கள் ஆதித்தமிழர் பேரவை அமைப்பின் சார்பாக அதன் நிர்வாகிகள் சிலர் பொள்ளாச்சி மத்தியபேருந்து நிலையம் உட்பட நகரின் முக்கிய இடங்களில் விநியோகித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல்அறிந்த போலீசார் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த ஆதித்தமிழர் பேரவையின் கோவை மாவட்ட தலைவரான கோபால் உட்பட 3 பேரைக்கைது செய்தனர்.மேலும் ஆதித்தமிழர் விடுதலை முன்னனி அமைப்பைச் சேர்ந்தவர்களும் வைகோவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நகரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டியதோடு, துண்டுப்பிரசுரங்களும் விநியோகித்தனர்.
நம்ம ஊர் பரவாயில்லை!
12 years ago
No comments:
Post a Comment