பொள்ளாச்சி.டிச.15 கோவை மாவட்டம் பொள்ளாச்சி வழியாக கேரளாவிற்கு மணலைக் கடத்தமுயன்ற 4 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக ஆறுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் பறிமுதல் செய்யப்பட்ட மணல் மற்றும் லாரிகள் பொள்ளாச்சி வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
திருச்சி மற்றும் கரூர் பகுதியிலுள்ள காவிரியாற்றுப் படுகையிலிருந்து கடத்தப்படும் மணல் கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு வழியாக ஏராளமான அளவில் கடத்தப்பட்டு வருவது வாடிக்கையாகியுள்ளது.
இதனையடுத்து கோவை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில்,போலீசார் இன்று கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சியை அடுத்துள்ள கோமங்கலம் காவல் சரகத்திற்குட்பட்ட எரிசினம்பட்டி, ஆனைமலையை அடுத்துள்ள கோவிந்தாபுரம் ஆகிய பகுதிகளில் தீவிர வாகனத்தணிக்கையில் ஈடுபட்டனர்.
இத் தணிக்கையின்போது உரிய ஆவணங்களின்றியும்,அளவிற்கு அதிகமான மணல்பாரம் ஏற்றிக்கொண்டும்,கேரளாவிற்கு செல்வதற்காக,அவ்வழியாக வந்த நான்கு மணல் லாரிகள் பிடிபட்டன.உடனடியாக இதனைப் பறிமுதல் செய்த போலீசார், மணல் கடத்தமுயன்றதாக லாரி ஓட்டுனர்கள் மற்றும் கிளீனர்கள் ஆறுபேரை கைது செய்துள்ளனர்.இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கோமங்கலம் மற்றும் ஆனைமலைப் போலீசார், தலைமறைவான மணல் மற்றும் லாரிஉரிமையாளர்களான மூன்று பேரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மணல் லாரிகள் பொள்ளாச்சி வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.மேலும் பொள்ளாச்சி,கிணத்துக்கடவு பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு செல்லும் சாலைகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment