



ரூ.5 லட்சம் மதிப்புள்ள சந்தனக்கட்டைகள் ரொக்கம் பறிமுதல்.!
கடத்தலுக்கு உடந்தையான பெண் கைது.!
பொள்ளாச்சி.டிச.29 கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடு;த்துள்ள ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியிலிருந்து கடத்தப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள சந்தனக்கட்டைகள்,ரொக்கம் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை கைப்பற்றியுள்ள வனத்துறையினர்,கடத்தலுக்கு உடந்தையாக இருந்த ஒரு பெண்ணையும் கைது செய்துள்ளனர். மேலும் தப்பியோடிய இருவரைத் தேடிவருகின்றனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ளது ஆனைமலை புலிகள் காப்பகம்.இங்குள்ள குழிப்பட்டி பகுதியிலிருந்து ஆழியாறு புளியங்கண்டி வழியாக சந்தனக்கட்டைகள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் அவ்வழியாக வந்த கார் ஒன்றை தடுத்துநிறுத்தி சோதனையிட முயற்சித்தபோது அந்தக்கார் நிற்காமல் சென்றது.
இதனையடுத்து பொள்ளாச்சி வனச்சரகர் வீரமணி தலைமையில் அக்காரினை விரட்டிச்சென்ற வனத்துறையினர் சங்கிலிப்பள்ளம் என்ற இடத்தில் அதனை மடக்கிப்பிடித்தனர். அப்போது காரினுள் இருந்த பொள்ளாச்சியை சேர்ந்த வெங்கட்ராமன் மற்றும் மாவடப்பை சேர்ந்த குமார் ஆகியோர் தப்பியோடிவிட்டனர்.
காரினுள் இருந்த கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த தேவி என்ற பெண்ணைக் கைதுசெய்த வனத்துறையினர்,காருக்குள் சோதனையிட்டபோது 5 மூட்டைகளில் இருந்த,ரூ.3 லட்சம் மதிப்புள்ள 90 கிலோ சந்தனக்கட்டைகளும்,ரொக்கப்பணமாக ரூ.2 லட்சத்து 20 ஆயிரமும் இருந்தன. இதனையடுத்து அவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள வனத்துறை அதிகாரிகள் தப்பியோடிய வெங்கட்ராமன் மற்றும் குமார் ஆகியோரை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
சந்தனக்கட்டைகள் கடத்தல் சம்பவத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment